Tuesday, October 20, 2009

சிக்கிமுக்கி - மின்னிதழ் அறிமுகம்


வணக்கம்!

தற்போது உலகம் முழுவதும் இணைய தளங்களில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நமது தமிழ் இலக்கியப் படைப்புகள் மற்றும் அதைச் சார்ந்த கட்டுரைகள் அனைத்தையுமே உலகமெங்கும் வசிக்கக் கூடிய நமது தமிழர்கள் இணையதளங்களின் மூலமாகவே வாசிக்கிறார்கள். சில சமயங்களில் புத்தகங்கள் அல்லது மாத இதழ்கள் அவர்களுக்குச் சரியான நேரத்தில் கிடைக்கப்பெறாத போதும் கூட விரைவாக இணைய தளம் அத்தேவையைப் பூர்த்தி செய்கின்றது.

அதன் அடிப்படையில், தொடர்ச்சியாக வரும் இணையதளங்கள் யாவற்றையும் நாம் உற்று நோக்கும் போது அவை இலக்கியப் படைப்பிற்கான ஒரு பரந்த வெளியாக இருந்த போதிலும், உலகளாவிய இலக்கிய அறிமுகங்கள், நவீன உள்ளூர் படைப்புகள், முக்கிய படைப்பாளிகளின் நேர்முகங்கள், துணிச்சலான விமர்சனங்கள், மாற்றுக்கருத்து மிக்க படைப்புகள் என பல்வேறு தளங்களில் இன்னும் தீவிரமாய் இயங்க வேண்டிய கட்டாயத்தையும் நம்மால் உணர முடிகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழில் இருந்தும் பிறமொழிகளுக்கும் பரிவர்த்தனை நடந்துகொண்டிருக்கிறது. இவற்றில் சமகாலத்திற்கான படைப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டமைக்கு சான்றுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.. தமிழின் பல படைப்புகள் இன்று உலகப் இலக்கியங்களுக்கு இணையாக மொழித்திறனும் விரிந்த உலகளாவிய தளத்தில் இயங்கக்கூடிய வீரியம் மிக்கவையாகவும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கத் தகுந்தவையாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.

இவை மட்டுமின்றி, தமிழில் புதிய படைப்பாளிகள் மற்றும் முக்கியமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகிய யாவரையும் மொழிவழியே ஒருங்கிணைத்து இலக்கியக் கலாசாரம் எவ்வாறு தமிழில் கடந்த ஐம்பது வருடங்களாக இயங்கி வருகிறது என்பது குறித்தும் அதன் தொடர்ச்சியாக உருமாறிவரும் பல்வேறு புதிய போக்குகளைக் குறித்தும் ஒரு ஆய்வு ரீதியான பார்வையை வழங்க வேண்டிய அவசியத்தையும் நம்மால் உணர முடிகிறது.

எனவே மேற்சொன்ன கருத்துகளை முழுவதுமாய் உள்வாங்கி, தமிழில் புதிய முயற்சியாக “சிக்கிமுக்கி” என்ற இணைய இதழை தமிழ் இலக்கிய உலகத்திற்கும், அதன் படைப்பாக்கத்திற்கும் ஒரு புதிய வெளியாக உருவாக்கி நவம்பர் 2009ல் அதனை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளோம். ”சிக்கிமுக்கி” என்ற இந்த இணைய இதழ் தனது செயல்திட்டமாக, உலக செவ்வியல் பண்புமிகுந்த இலக்கியங்கள் தொட்டு தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளைத் தூண்டும் வண்ணமும், தத்துவார்த்தக் கோட்பாட்டு உருவாக்கங்களை மையமாக்கி ஒரு புதிய இலக்கை நோக்கி இலக்கியத்தை நகர்த்தும் வண்ணமுமாக தனக்குள் உறுதி கொண்டிருக்கிறது.

ஆகவே உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகளும், வாசகர்களும் இந்த இணைய இதழில் பங்கேற்றும் புதிய மாற்றுக்கருத்துள்ள தங்களுடைய படைப்புகளை அனுப்பியும் எமது இலக்கிய முயற்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
தாரா கணேசன்

1 comment:

  1. 'யாதுமாகி'யிலிருந்து 'சிக்கிமுக்கி' எனப் பெயர் மாற்றம் வந்ததெப்படி?

    ReplyDelete